Wednesday, March 30, 2011

யார் நான் ?

நாட்கள் நிறைய ஆகிவிட்டது
உள்ளங்கையை உற்றுப் பார்த்து.

ரேகைகள் அல்ல தெரிவது;
மறைத்து வைத்த சரித்திரங்கள்.

கைபற்றிய வெற்றிகள்,
மூடி மறைத்த பாவங்கள்.

துடைத்து அழித்த கண்ணீர் துளிகள்,
நிஜமாய் உழைத்த உழைப்புகள்.

எல்லாம் தெரிகிறது
ரேகைக்கு பின்னால்.

புறங்கை தழும்புகள்
பூமேல் புழுதி போல.

விழுந்து எழுந்த நாட்களை,
விரோதம் சேர்த்த நாட்களை.

வலியை ரசித்த நேரங்களை,
உடலை வருத்திய பயிற்சிகளை.

காய்ந்தும் மறையாது
மறைத்து காட்டுகிறது.

எங்கெங்கோ சென்று
எப்படியோ கற்று

இங்கு, இன்று நான் யார்?
பதில் கையில் தெரியவில்லை.

கணங்களில் தெரிகிறது
முதிர்ச்சி இன்னும் தொடர்கிறது என்று.

Tuesday, March 29, 2011

நான் ஒரு நடிகன்


நான் நிற்பதும் நடப்பதும் பொய்.

நான் சொல்வதும் செய்வதும்,

நானாய் வரையறுத்ததே.


தத்துவம் பொய் என்பவன் நான்.

பொய் போல் ஒரு தத்துவம் சொல்கிறேன் கேள்.

உன்னை புரிந்து விட்டேன்,

உன்னை அறிந்து விட்டேன்,

என ஒருவன் எண்ணி விட்டால்;

அன்று நீ ஜெயித்து விட்டாய்.

உன் ஒப்பனைகள் உபயோகம் ஆகியது.

நடிப்புதான் உலகம்.

ஆயிரம் சொல்லி ஆயிரம் செய்தாலும,

ஆழத்தில் ரகசியம் இல்லா மனிதனுண்டா?

ரகசியமாய் நீ ரகசியம் வைத்திருப்பது தெரிந்தும்,

உன் முன்னே மெய்யாய் சிரிப்பவன் நான்.

நீயும் அப்படியே.

ஒவ்வொருவனும் இங்கு ஒரு கதை.

நீயும் கதைதான் நானும் கதைதான்.

கதைக்களத்தில் எல்லாம் உண்மையல்ல;

நீ படிப்பதும் நான் படிப்பதும்,

பொய்யாய் போகலாம்.

இதெல்லாம் அறிந்தும் 

உன்னை நண்பாவென ஒருவன் இருந்தால்;

அவனே நடிப்பில் சிறந்தவன்.

சில நேரங்களில் பொய்கள் சிறந்தது.

பொய் இல்லாது போனால்.

மெயகிங்கேது மதிப்பு ??